திரு. கே.எஸ்.ராதாகிருஷ்ணன்
தமிழகத்தின் மூத்த அரசியல் ஆளுமை, சட்ட நிபுணர், மனித உரிமைகள் ஆர்வலர், எழுத்தாளர்,ஆசிரியர் - கதை சொல்லி.

தமிழகத்தின் மூத்த அரசியல் ஆளுமை, சட்ட நிபுணர், மனித உரிமைகள் ஆர்வலர், எழுத்தாளர் என்று பல தளங்களில் செயல்பட்டு வருபவர். கர்மவீரர் காமராஜர், திமுக தலைவர் டாக்டர். கலைஞர், திரு. வைகோ மற்றும் பழ.நெடுமாறன் ஆகியவர்களின் நன்மதிப்பைப் பெற்றவர். தமிழக அரசியலில் முதல் செய்தித் தொடர்பாளராகவும் இருந்தவர். 1989 மற்றும் 1996 ஆகிய ஆண்டுகளில் நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட்டார்.
கே.எஸ்.ஆர் என்ற அழைக்கப்படும் இவர், திருநெல்வேலி மாவட்டம் குருஞ்சாகுளம் கிராமத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். சட்டப் படிப்பில் தனது முதுநிலைக் கல்வியை முடித்தபின் 1981 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு வழக்கறிஞர் கழகத்தில் பதிவு செய்து கொண்டு, சென்னை உயர்நீதி மன்றத்தின் பல்வேறு சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளில் வழக்குரைஞராக வாதாடியுள்ளார்.
திரு. கே.எஸ். ராதாகிருஷ்ணன் அவர்கள் புது தில்லியில் இயங்கி வரும் இந்திய சட்ட நிறுவனத்திலும், சர்வதேச சட்ட அமைப்பின் (இந்தியா பிரிவு) மற்றும் இந்தியா மத்தியஸ்த கவுன்சில் ஆகியவற்றில் ஆயுட்கால உறுப்பினராக இருந்து வருகிறார்.
இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் தமிழகப் பிரிவின் இணைச் செயலாளராக இருந்து வருகிறார். அதுமட்டும் அல்லாது பொது மற்றும் அரசுத்துறைகளில் பல்வேறு பொறுப்புகளை வகித்தார்.



தமிழக அரசின் அறநிலையத் துறையின் சார்பாக பல்வேறு வழக்குகளில் வழக்கறிஞராகவும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் தமிழ்நாடு தொழில் கழகத்தின் சட்ட ஆலோசகராகவும் இருந்து வந்தார்.கொச்சி துறைமுக கழகத்தின் நடுவராக இருந்தார்.மத்திய திரைப்படத் தணிக்கைத் துறையின் உறுப்பினராக 12 வருடங்கள் இருந்தார்.அவர் வகித்து வந்த பதவிகள் எல்லாம் செம்மையாகவே பணியாற்றி வந்திருக்கிறார்.மத்திய தொழிலாளர் நல அமைச்சகத்தின் கீழ் அமைந்துள்ள குழந்தை தொழிலாளர் மற்றும் தொழிலாளர் கல்விக்கான மத்திய ஆலோசனை வாரியத்தின் உறுப்பினராகவும் இருந்தார்.



மக்களுக்கான நீதி சேவை
திரு. கே.எஸ். ராதாகிருஷ்ணன் அவர்கள் நேர்மையான சட்டசெயற்பாடுகளைக் கொண்டவர். சென்னை உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் மக்கள் நலனுக்காக பல்வேறு பொது நல வழக்குகளை தொடர்ந்தவர். அதில் நாட்டில் உள்ள நதிகளை தேசியமயமாக்குதல், நதிகளை இணைத்தல் மற்றும் மேற்கே கேரளாவில் பாயும் நதிகளை தமிழகத்திற்கு திருப்பி விடக் கோரி என்று 1983 ஆம் ஆண்டு முதல் போராடி உச்ச நீதிமன்றத்தில் போராடித் தீர்ப்பையும் பெற்றார். சிறைக் கைதிகளுக்கான வாக்குரிமைக்காகவும் பஞ்சாயத்து ராஜ் அமைப்பில் மூன்றடுக்கு முறைக்காகவும் போராடினார்.
- 1983 ஆம் வருடம் விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் கிராமத்தில் இயங்கி வந்த தமிழ்நாடு சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறிய நச்சுப் பொருட்களால் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு வந்ததையடுத்து அந்த ஆலையினை மூட வேண்டி திரு. கே.எஸ்.ராதாகிருஷ்ணன் அவர்கள் தொடர்ந்த வழக்கில் ஆலையை மூடுமாறு இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தமிழக அரசு 70 கோடி ரூபாய் செலவில் அந்த ஆலையை புதுப்பித்து சுற்றுச்சுழல் மாசுபடாமல் இருக்க செய்யுமாறு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது. இந்த உத்தரவால் ராஜபாளையம் மற்றும் சிவகாசி பகுதி மகிழ்ச்சியடைந்து திரு. கே.எஸ்.ஆர் அவர்களுக்கு தங்களது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.
- கம்பம் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள கண்ணகி கோவிலுக்கு தமிழ் நாட்டைச் சேர்ந்த பக்தர்கள் வருவதற்கு கேரள அரசு தடை விதித்தையடுத்து திரு. கே.எஸ்.ஆர் அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அங்கு காவல்துறை பாதுகாப்புடன் பக்தர்கள் வழிபாட்டை தொடர வழி செய்தார்.
- 1983 இவர் தொடர்ந்த ரிட் மனுவினால் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தை தமிழக அரசு வறட்சி பாதிக்கபட்ட பகுதியாக அறிவித்தது
- காவல் நிலையத்தில் இறந்த பலரது குடும்பங்களுக்கு பொதுநல வழக்கு தொடர்ந்து அதன் மூலம் இழப்பீட்டு தொகையை பெற்றுத் தந்துள்ளார்.
- விவசாய மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பாக இவர் தொடர்ந்த ரிட் மனுக்கள் பல நிலுவையில் உள்ளன.
- தேசிய மனித உரிமை ஆணையத்திலும், மாநில மனித உரிமை ஆணையத்திலும் பல்வேறு ரிட் மனுக்களை தாக்கல் செய்துள்ளார்.
- கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக முதல் முதலில் திரு. கே.எஸ்.ஆர் அவர்கள் தான் வழக்கு தொடர்ந்தார்
- தமிழக அரசு அமைத்த பல விசாரணைக் குழுக்கள் மற்றும் பொதுநல வழக்குகளுக்கு ஆலோசகராக இருந்திருக்கிறார்.
- பொது மக்கள் பிரச்சனைகளுக்காக பல முறை சிறை சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது
மனித உரிமை மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சினைகள்
அம்னெஸ்டி போன்ற மனித உரிமை மீறலுக்காக போராடி வரும் உலகளாவிய மனித உரிமை அமைப்புகள் பலவற்றுடன் இணைந்து மனித உரிமை, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பாலியல் தொழில் ஒழிப்பு மற்றும் பல்வேறு சமூகப் பிரச்சினைகளுக்கான தளங்களில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். மரண தண்டனைக்கு எதிராக பல்வேறு வழக்குகளில் தண்டிக்கப்பட்ட சிறைக்கைதிகளுக்கு ஆதரவாக வாதாடியுள்ளார். ஊடகத்தில் மனித உரிமை குறித்து தொடர்ந்து எழுதிவருவது மட்டுமல்லாமல் பல புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார். மேற்குத் தொடர்ச்சி மலையில் ஏற்படும் சுற்றுச் சூழல் பாதிப்பு குறித்து பலவிதமான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.
புத்தகங்கள்
எழுத்து மற்றும் இலக்கியத்தின் மீது இவருக்கு உள்ள ஈடுபாட்டினால் ஊடகத்துறையிலும் அச்சுத்துறையிலும் அனைவராலும் அறியப்படுபவர். தமிழ் இலக்கியத்தின் மீதுள்ள தீராக் காதலினால் திரு. கி. ராஜநாராயணன் அவர்களுடன் இணைந்து கதைசொல்லி எனும் காலாண்டு இலக்கிய இதழை நடத்தி வருகிறார்.
இதுவரை இவர் பல்வேறு சமூகப் பிரச்சினைகள் குறித்து எழுதி பல புத்தகங்களை வெளியிட்டுள்ளார். அவற்றில் குறிப்பிடத்தக்க சில:
- உரிமைக்கு குரல் கொடுப்போம்
- மனித் உரிமைகள் என்றால் என்ன?
- நிமிர வைக்கும் நெல்லை
- தமிழ்நாடு 50
- கரிசல் காட்டில் கவிதை சோலை பாரதி
- கனவாகிப் போன கச்சத்தீவு
- சேதுக் கால்வாய் – ஒரு பார்வை
- தூக்குக்கு தூக்கு
- கலைஞரும் முல்லைப் பெரியாறும்
- ஈழத் தமிழர் பிரச்சினை
- மனித உரிமைச் சட்டங்களும் சில குறிப்புகளும்
- தமிழ்நாடு மேலவை
- திமுகவும் சமூக நீதியும்
தற்போது மத்திய மாநில அரசுகளின் இடையே உள்ள உறவு நிலை, விவசாயிகளின் போராட்ட வரலாறு மற்றும் வீரபாண்டிய கட்டப்பொம்மன் வரலாறு ஆகியவை பதிப்பில் உள்ளது
And miles to go before I sleep.